அது ஒரு அடர்ந்த கானகப் பகுதி. அங்கே மனித நடமாட்டமும் அவ்வப்போது உண்டென்பதற்கு அறிகுறியாக ஒரு நீண்ட பாதை. அந்தப் பாதையின் வழியே வந்து கொண்டிருந்தார் ஸ்ரீ ஸமர்த்த ராமதாஸர். அந்நாளில் (இந்நாளிலும்தான்) அவரை அறியாதார் மராட்டிய மாநிலத்திலேயே இல்லை. ஆனானப்பட்ட சத்ரபதி சிவாஜியின் இரண்டு குருநாதர்களில் ராமதாஸரும் ஒருவர்! மற்றொரு குரு, ஸ்ரீ துகாராம் சுவாமிகள்!
கொரில்லா போர் முறையில் அவ்வப்போது பதுங்கியிருந்து தாக்கி, மொகலாயப் படைகளை மாவீரன் சிவாஜி துவம்சம் செய்து கொண்டிருந்த சமயம் அது. இதனால் அந்நியர்களின் வசமிருந்த பல கோட்டைகள், சிவாஜியின் ஆளுமையின் கீழ் வந்து கொண்டிருந்தன.
இது ஒருபுறமிருக்க ராமதாஸரோ மொகலாயர்களுக்கு எதிராக மறைமுகமான அறப்போரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்; ஒரே இடத்தில் தங்கியிராமல் கிராமம் தோறும் சென்றார்; பாரத இதிகாசத்தின் ஒரே பரிபூரணக் கதாநாயனாகிய ராமபிரானின் பெருமைகளைத் திக்கெட்டும் பரப்பினார். ஆங்காங்கே ஸ்ரீஅனுமனின் திருவுருவச் சிலைகளை பிரதிஷ்டை செய்து, மக்களிடையே ராம நாமத்தை ஜபிக்கும் பழக்கத்தைத் தூண்டிவிட்டார். இதனால் மொகலாயர்களின் மீதிருந்த அச்சம், மக்களிடையே குறைய ஆரம்பித்தது.
"சக்ரவர்த்தி திருமகனாகிய ராமபிரானும், அனுமனும் ஸனாதன தர்மத்தைப் பாதுகாப்பார்கள்' என்ற திட நம்பிக்கை, எங்கெங்கும் பரவியது. இந்த எழுச்சி, மறைமுகமாக சிவாஜியின் வீரச் செயல்களுக்குத் துணை நின்றது. ஸ்ரீஸமர்த்த ராமதாஸர், வாயு குமாரனாகிய அனுமனின் அவதாரம் என்பதை மக்கள் உணரத் தொடங்கினர்.
மறுபுறத்தில் துகாராம் சுவாமிகள், "ஜாதிப் பாகுபாடுகளை வேரறுத்தார்! இறைவனின் திருநாமத்தை உச்சரிப்பவர்கள் எவராயினும், அவர்களுக்கு முக்தியென்பது உறுதி என்று ஆயிரக்கணக்கானோருக்கு உபதேசித்து, பக்தி இயக்கத்தைப் பரவலாக்கிக் கொண்டிருந்தவர். வைசிய குலத்தில் தோன்றிய அவருடைய பாதங்களை வேத பண்டிதர்கள் பூஜித்தனர்.
மீண்டும் நாம் அந்த வனப்பகுதிக்கு வருவோம். அங்கே ராமதாஸர் நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிரே குதிரையின் குளம்பொலி கேட்டது. பரியொன்று பாய்ந்து வருகிறதென்பதை புரிந்து கொண்ட ராமதாஸர், வழியைவிட்டு ஒதுங்கி நின்றார். அவர் திருவாக்கில், "ஜய் ராம்... ஸ்ரீ ராம்' என்ற திருநாமம் ஒலித்துக் கொண்டிருந்தது.
ராமதாஸர், தீவிர ராம பக்தர். ராகவனை தவிர வேறு கடவுளரை தொழ விரும்பாதவர். (ஒரு சந்தர்ப்பத்தில் அவர் பண்டரிபுரம் சென்றிருந்தபோது அங்குள்ள விட்டல மூர்த்தி, ராமதாஸரின் மனநிலையை அனுசரித்து ராமபிரானாகவே காட்சியளித்தார் என்பது வரலாறு. "யேதேம் உபாகா ஸ்ரீராமா' என்ற ராமதாஸரின் பாடல், இச்சம்பவத்துக்கு இன்றும் அகச்சான்றாக விளங்குகிறது).
ராம நாமத்தை உச்சரித்தபடி, வழியை விட்டு ஒதுங்கி நின்ற ஸமர்த்தரின் அருகில் அந்தக் குதிரை வந்து நின்றது. அட! என்ன ஆச்சரியம்! அந்தக் குதிரையின் மேல் ஸமர்த்தரின் முக்கியச் சீடரான சிவாஜி மஹாராஜா அமர்ந்திருந்தார். அந்த சத்ரபதியின் முகத்திலே ஒரு மர்மப் புன்னகை.
வாகனத்தில் அமர்ந்திருந்தாலும், அரியணையில் அமர்ந்திருந்தாலும் தன் குருவாகிய ராமதாஸரை கண்டுவிட்டால் ஒருவிதப் பரபரப்போடும், பணிவோடும் ஓடோடி வந்து அவரருகில் கை கட்டி நிற்கும் இயல்புடையவர் சிவாஜி. ஆனால் அன்று ஏனோ குதிரை மீதிலிருந்து மன்னர் கீழே இறங்கவில்லை. மனதை வென்ற மகாத்மாவாகிய ராமதாஸரும் அதைப் பொருட்படுத்தவில்லை. ""என்ன சிவா...? திடீரென்று இந்தப் பக்கம்?'' என்று தன் சீடனிடம் வாஞ்சையோடு கேட்டார் ஸமர்த்தர்.
"உங்களைப் பார்த்துப் பேசத்தான் வந்தேன்'' என்று கம்பீரமாகவே பதிலளித்தார் சத்ரபதி. அவரிடம் எப்போதுமுள்ள பணிவு, அன்று துளியளவும் காணப்படவில்லை.
""நான் இந்தப் பக்கம் வந்து கொண்டிருப்பது உனக்கு எப்படித் தெரிந்தது?'' என்று கேட்டார் ஸமர்த்தர். ""இந்த சிவாஜிக்கு தெரியாமல் உலகில் எதுவும் நடப்பதில்லை'' என்று சொன்னபடி குதிரையிலிருந்து கீழே குதித்தார் மாமன்னர்.
அந்த வனப்பகுதியின் பெயர் ஜெஜுரி காட். அங்கே ஒரு அழகிய குன்று உள்ளது. அதன் மேல் "ஸ்ரீகண்டோபா மஹாதேவர்' என்ற பெயருடன்
சிவபெருமான் கோயில் கொண்டுள்ளார். குதிரையை விட்டிறங்கிய சிவாஜி, தன் குருநாதர் அருகில் காலணிகளைக்கூட கழற்றாமல் வந்து, ""வாருங்கள்! இந்த மலையுச்சியில் இருக்கும் சிவபெருமானை தரிசிப்போம்'' என்று அழைத்தார்.
சிவபெருமான் கோயில் கொண்டுள்ளார். குதிரையை விட்டிறங்கிய சிவாஜி, தன் குருநாதர் அருகில் காலணிகளைக்கூட கழற்றாமல் வந்து, ""வாருங்கள்! இந்த மலையுச்சியில் இருக்கும் சிவபெருமானை தரிசிப்போம்'' என்று அழைத்தார்.
ராமதாஸரோ ஏகாந்த ராமபக்தர். அவருக்கு சிவாலய தரிசனத்தில் அவ்வளவாக நாட்டமில்லை. இருப்பினும் தன் முதன்மைச் சீடன் அழைக்கிறானே என்பதற்காக ஜெஜுரி மலைக் கோயிலை நோக்கி நடக்கத் தொடங்கினார். அதைவிட அன்று சிவாஜி நடந்து கொள்ளும் விதம் சற்று வித்தியாசமாக இருப்பதை அவர் உணராமலில்லை.
குன்றின் உச்சியை குருபரனோடு அடைந்த சிவாஜி, ""வாருங்கள் ஆலயத்துக்குள் செல்வோம்'' என்று ஸமர்த்தரை அழைத்தார். இருவரும் கருவறையின் அருகே சென்றனர். சிவாஜி மட்டும் ஸந்நிதிக்குள் சென்றார்! ஸமர்த்தரை நோக்கித் திரும்பினார்! புன்னகைத்தார்! மறைந்தார்! அங்கே ஒரு பேரொளி தோன்றி, அதுவும் கணப்பொழுதில் அடங்கியது!
திகைத்து நின்ற ஸமர்த்தரின் காதுகளில் ஒரு "அசரீரி' ஒலித்தது. ""ராம பக்த சிகாமணியாகிய ஸமர்த்தரே! உம்மைக் காணும் ஆவலில் பரமேஸ்வரனாகிய நான்தான் சிவாஜி வடிவத்தில் வந்தேன். ஒரே பரமாத்மா ராமனாகவும், கிருஷ்ணனாகவும், நானாகவும் காட்சியளிக்கிறோம் என்பதை நீங்கள் அறியாதவரல்ல! எனக்கு ராம பக்தர்களை தரிசிப்பதில் பேரானந்தம் விளைகிறது. அதேபோல் ராம பிரானுக்கும் எனது பக்தர்கள் பிரியமானவர்கள். மக்கள்தாம் அறியாமையால் பேதம் பார்த்து, தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றனர்'' என்று முழங்கினார் ஜெஜுரி வாழ் ஸ்ரீ கண்டோபா மஹாதேவர்.
சிவபெருமானின் இந்த அருட் திறனை நினைத்து வலிய வந்து தரிசனமளித்த பெருங்கருணையை எண்ணி உருகிப் போனார் ஸ்ரீ ஸமர்த்த ராமதாஸர். உடனே, "தேவ சிவாசா அவதார' என்ற பாடலை அங்கேயே பாடி சிவபெருமானை வழிபட்டார். ஆடியும், பாடியும், அங்கிருந்த மஞ்சளை நெற்றியில் பூசியும் மெய் மறந்தார். (ஜெஜுரியில் வீபூதிக்குப் பதிலாக மஞ்சள் பிரசாதம் வழங்குவதுதான் மரபு.)
""ஹே பரமேஸ்வரா! திருக்கயிலை என்னும் பனிமலையில் எப்போதும் வாழ்கின்ற நீங்கள், இந்த ஜெஜுரி மலையில் "கண்டோபா' என்ற திருநாமத்துடன் வசிக்கின்றீர். நீங்கள் சிவாம்சமான மார்த்தாண்ட பைரவர் என்பதை அறிந்தேன். எப்போதும் இடப வாகனத்தில் வலம் வரும் சம்புவே! இங்கு உமக்கு குதிரைதான் வாகனம்! மேனியெங்கும் திருநீறு பூசியுள்ள நீங்கள், இங்கே மஞ்சள் பூசி தரிசனம் தருகின்றீர்கள்! உமை என்ற நங்கையோடும், நதியரசியான கங்கையோடும் எப்போதும் விளங்கும் நீங்கள் இங்கே ஹல்சா, பனாய் என்னும் இரு தேவியருடன் தரிசனம் தருகிறீர்கள்'' என்று பலவாறாக சிவபெருமானை துதித்து மகிழ்ந்தார் ஸ்ரீ ஸமர்த்த ராமதாஸர்.
சிவபெருமானுக்கு "திரிபுராரி' என்றொரு பெயர் உண்டு. பொன், வெள்ளி, இரும்புக் கோட்டைகளால் மூன்று பறக்கும் நகரங்களை நிர்மாணித்து, அவற்றைக் கொண்டு நல்லோர்களுக்கு நாசம் விளைவித்து வந்தனர் மூன்று அசுரர்கள். அவர்களைத் தன் புன்னகையாலேயே பொசுக்கி அழித்தார் சிவபெருமான். இதன் காரணமாகவே அவர் "திரிபுராரி' என்று போற்றப்படுகிறார்.
அப்படிப்பட்டவர், இங்கே மனம், வாக்கு, தேகம் என்ற முப்புரங்களையும் ராம மயமாகவே ஆக்கிக் கொண்டுவிட்ட ராமதாஸர் என்ற பக்தரை தன் புன்னகையால் உருக்கி ஆட்கொண்டு, தன் வசமாக்கிக் கொண்டார்; அப்படிப்பட்ட அதிசயம் நிகழ்ந்த திருத்தலமே ஜெஜுரி.
எங்கே உள்ளது இந்த ஜெஜுரி...? மஹாராஷ்டிர மாநிலத்தில், புனே-சதாரா நெடுஞ்சாலையில், புனேவிலிருந்து 47 கி.மீ. தொலைவில் "ஜெஜுரி காட்' அமைந்துள்ளது.
இங்குள்ள குன்றின் மீதுதான் "ஸ்ரீகண்டோபா மந்திர்' உள்ளது. "ஸ்ரீ' என்ற சொல்லுக்கு "விஷம்' என்ற பொருளும் உண்டு. ஆலாகால விஷத்தை தனது கண்டத்தில் (கழுத்துப் பகுதியில்) அடக்கி வைத்திருப்பதால் இவர், "ஸ்ரீ கண்டோபா' என்று அழைக்கப்படுவதாகச் சொல்கின்றனர்.
மஹாராஷ்டிர மாநிலத்தின் தொன்மையான கோயில்களில் ஸ்ரீ கண்டோபா மந்திரும் ஒன்று. ஸ்தல புராணப்படி இங்கே தவத்தினால் பெற்ற வரங்களால் மற்றவர்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்திக் கொண்டிருந்த "மல்லா' என்ற அசுர சக்தியை, "மார்த்தாண்ட பைரவ' வடிவத்தில் வந்து பரமேஸ்வரன் வதம் செய்தார்.
பராசக்திக்கு உரிய ஸ்ரீசக்கரத்தின் பரிவார கணங்களில் ஒருவராக ஸ்ரீ மார்த்தாண்ட பைரவர் பூஜிக்கப்படுவது இங்கே குறிப்பிடத் தக்கது.
மொகலாய மன்னன் ஒüரங்க சீப்பின் படைகள் இக்கோயிலை அழிக்க நினைத்து இங்கே வந்தபோது, சிவ கணங்களே பல்லாயிரம் தேனீக்களாக வந்து அந்தப் படையை ஓட, ஓட விரட்டியதாகச் சொல்கின்றனர்.
இன்றும் ஏராளமான மராட்டியர்களுக்கு ஸ்ரீ கண்டோபா, குலதெய்வமாக விளங்குகிறார். இங்கு காவடி எடுப்பதும், மஞ்சள் துகள் சமர்ப்பித்து பூஜிப்பதும் பெருமளவில் நடைபெறுகிறது. இன்றளவும் மஹாராஷ்டிர மாநிலக் கட்டிடக் கலைக்கு உன்னதச் சான்றாக "ஜெஜுரி' ஆலயம் விளங்குகிறது.
சத்ரபதி சிவாஜியும், அவரது மகன் சாம்பாஜியும் மொகலாயர் ஆட்சிக் காலத்தில் பகைவர்களைத் தாக்கியழிக்கும் முக்கியத் திட்டங்களை ஜெஜுரி காட் சிவாலயத்தில்தான் தீட்டிச் செயல்படுத்துவார்களாம்! இந்த சிவனருளால் வெற்றியும் பெறுவார்களாம்!
ஸ்ரீ கண்டோபாவை வணங்குபவர்களுக்கு எதிரி தொல்லை, பில்லி-சூனியம் போன்ற தோஷங்கள் நீங்குமென்பதற்கு ஏராளமான பக்தர்கள் இன்றளவும் சான்று கூறுகின்றனர். ஹர ஹர மஹாதேவ!







No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.